Friday, January 4, 2008

புலம்பெயர்தல்

கையில் பெட்டியுடனும்
அம்மாவின் கண்ணீருடனும்,
அப்பாவின் அறிவுறையுடனும்,
கிராமத்தை விட்டு வெளியேறி
ஏழெட்டு வருடமாகிறது!

கல்லூரி படிப்பிற்காக
நகரம் வந்தது,
நண்பர்களோடு பேச்சிலர் வாழ்கையும்,
படிப்பிற்கேற்றவேலையும்
நகரத்தில் கிடைத்துவிட
விழித்துக்கொண்ட பின்னும்
ஞாபகத்திலிருக்கும்
கனவாகவே ஆகிப்போனது
கிராமம்!

அம்மாவின் அன்போ
அப்பாவின் வசவோ,
கல்லூரியில் கடிதத்திலும்,
பிறகு தொலைபேசியிலும்,
இப்பொழுது
ஆளுக்கொன்றாய்
வாங்கிக் கொடுத்திருக்கும்
செல்போனில் மட்டும்தான்.

விளையாடித் திரிந்த
வேலிக்காடுகளையும்,
அனில்வேட்டையாடிக் கிடந்த
மஞ்சனத்தி மரங்களையும்,
அலைந்து திரிந்த
ஆற்றங்கரையையும்
எட்ட நின்று
வேடிக்கை பார்ப்பது கூட
விடுமுறைகளில் மட்டும்தான்.

நகரத்தில் பார்க்கிற
கடற்கரை பொளர்னமியையும்,
கட்டிடங்களுக்கு
பின்னால் மறைகிற
சூரியனையும்,
அபார்ட்மென்ட் மாடியில் பெய்கிற
மழையையும்
கிராமத்து நிமிஷங்களோடு
ஒப்பிட்டுக் கொன்டே கிடக்கிறது மனசு!

ஊருக்கு போக முடியாத
பண்டிகை நாட்களில்
உள்ளூர் நண்பனின்
வீட்டுக்கு செல்கையில்,
குடும்பத்தோடிருக்கும்
அவனைப் பார்க்கும்போது
ஏக்கம் மெதுவாய்
எட்டிப் பார்க்கும்!

தலை கீழாயிறங்கி
தரை தொட்டு வேரூன்றி
தாய்மரத்தின் கூடவேயிருந்து
தாங்கும் விழுதாய்
வாழமுடியாமல்,
பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து
துண்டாய் வெட்டியெடுத்து
தொலைதூரத்தில்
பதியனிட்டுக் கொன்டிருப்பதை
சுயபரிதாபம் சுட்டிக் காட்டும்!

பார்த்துக் கொன்ட வேலையும்,
பழகிப்போன பிழைப்பும்,
நகரத்தோடு பினைத்துப் போட,
இழந்துவிட்ட சொர்கமாகவே
இருக்கிறது கிராமம்!

இனியென்ன......!
எல்லோரையும் போல,
நகரத்தின்மையத்திலோ ஓரத்திலோ,
இல்லை கொஞ்சம் தூரத்திலோ,
ஒரு வீடு வாங்கி,
ஆலமரத்தை
வேறோடு பெயர்த்து,
வேறிடத்தில் நடுவதுபோல,
அப்பா அம்மாவையும்
கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு
அழைத்து வரவேண்டும்.

மரமென்றால் பட்டுப் போகும்.
மனிதர்கள்தானே......!
பழகிப் போகும்!
என்ன........!
எனக்கு வாய்த்த
வேப்ப மரத்தடிப் பள்ளியும்,
வெள்ளம் பெருகியோடும் ஆற்றங்கரையும்,
மயில்கள் திரியும் வேலிக்காடும்,
களத்து மேட்டு
காவல் ராத்திரிகளும்,
அங்கு கேட்டுக் கிடந்த,
காதல்,கற்பனை,பேய்க் கதைகளும்,
ஊருனிக்கரை புளியம்பழங்களும்,
என் மகனுக்கோ மகளுக்கோ
என்னவென்றே தெரியாமல் போகும்!
http://www.keetru.com/literature/poems/venmani_selvan1.php
பொ.வெண்மணிச்செல்வன்

No comments: